எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரண்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரண்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன. -பெர்னாட்ஷா-

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்

மூலையில் கிடக்கும் வாலிபனே - தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனம்தான் வாழ்க்கையென - வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்

விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சகீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழி விழி உன் விழி நெருப்பு விழி - உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
எழுஎழு தோழா உன் எழுச்சி - இனி
இயற்கை மடியில் பெரும் புரட்சி

நீட்டிப் படுத்தால் உலக உருண்டையில்
நீதான் பூமத்திய ரேகை - நீ
போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வளம் வரும் புதுப்பாதை

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்துச்சொல் - உன்
சுட்டு விரலின் நகமாய் வானம்
சுருங்கியதென்று முழக்கிச்சொல்

தோள்கள் உனது தொழிற்சாலை- நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவானம்தான் உன் எல்லை

கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் - உன்
தோள்களிரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலமிடும்!

மன்புழுவல்ல மானிடனே - உன்
மாவலிகாட்டு வானிடமே
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைகளல்ல வேல்விகளே - தாராபாரதி -
Download As PDF

1 கருத்துரைகள்:

sweatha சொன்னது…

படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

கருத்துரையிடுக